மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
DPI Chennai
Published on

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. வீடியோவில் அவர் மூடநம்பிக்கை குறித்து பேசியிருந்தார். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை விசாரணை செய்ய உத்தரவிட்டார். பின்னர் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இயக்குனர் கண்ணப்பன் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com