எம்.பி.க்களின் பேச்சை இந்தியில் மொழிமாற்றி ஒளிபரப்பும் சான்சட் டிவி - சு.வெங்கடேசன் கண்டனம்

சான்சட் டிவி இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்.
எம்.பி.க்களின் பேச்சை இந்தியில் மொழிமாற்றி ஒளிபரப்பும் சான்சட் டிவி - சு.வெங்கடேசன் கண்டனம்
Published on

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் உரையை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.

இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் இந்த விவகாரத்தை தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில், "ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பேசும் உறுப்பினர்களின் பேச்சை ஹிந்தி மொழிமாற்றத்தை கொண்டு சான்சட் தொலைக்காட்சி ஒலிபரப்பி வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பேச்சை தங்களின் சொந்த மொழிகளில் கேட்பதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் இது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com