நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை தேவை - ஐகோர்ட் கிளை

கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற  நடவடிக்கை தேவை - ஐகோர்ட் கிளை
Published on

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வெற்றி விநாயகா கோவில் தலைவர் ஜெயக்கொடி, ஐகோர்ட்டு கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை திருநகர், சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது. 1969-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்ட இந்த கோவிலில் நாள்தோறும் பலரும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேமத்தன் குளம் அருகில் அமைந்துள்ள, இக்கோவிலின் ஒரு பகுதி நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அதிகாரிகள் முறையான சர்வே எதையும் மேற்கொள்ளாமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி கோவிலின் ஒரு பகுதியை அகற்றக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி திருநகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றுமாறு நிலையூர் பொதுப்பணித்துறை பொறியாளர் அளித்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.

பின்னர் பொதுப்பணித் துறையின் நிலையூர் பகுதி பொறியாளர் முறையாக அளவீடு செய்து நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அது எவ்விதமான ஆக்கிரமிப்பு இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com