மக்கள் குறைதீர் கூட்டம் - அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த கலெக்டர்

குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வரவில்லை.இதனால் மாவட்ட கலெக்டர் அவர்களை வெளியே நிற்க வைத்தார்.
மக்கள் குறைதீர் கூட்டம் - அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த கலெக்டர்
Published on

மதுரை:

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் கலெக்டரை நேரடியாக சென்று சந்தித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.

இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று கலெக்டர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிக அளவிலான மக்கள் மனு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை உருவானது.

இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுவதற்காக இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் காலை 10 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட நேரத்திலும் பணிக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் சங்கீதா, குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com