Madurai AIIMS | மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47% நிறைவு..! - RTI மூலம் வெளியான தகவல்

Madurai AIIMS | மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47% நிறைவு..! - RTI மூலம் வெளியான தகவல்
Published on
Summary

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜா. சமூக ஆர்வலரான இவர் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த 8 கேள்விகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டிருந்தார்.

அதன்படி அவர்கள் அளித்த பதில் கடிதத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணியின் மதிப்பீடு ரூ.2,021.51 கோடி ஆகும். மத்திய பட்ஜெட்டில் 471 கோடி ரூபாய் நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

47 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் மாதத்தில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திலேயே சில முடிவுற்ற பணிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் முழுமையாக கட்டுமான பணிகளை முடித்த பின்பு தான் எய்ம்ஸ் மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

எனவே கட்டுமான பணிகளை தரத்துடனும், ஜப்பான் நாட்டில் இருந்து வாங்க வேண்டிய நிதியை முறையாக வாங்கி விரைந்து பணிகளை முடித்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com