நடிகர் ஆர்.கே.சுரேசை முன் அனுமதி இல்லாமல் கைது செய்யக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்றுவிட்டார். மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
நடிகர் ஆர்.கே.சுரேசை முன் அனுமதி இல்லாமல் கைது செய்யக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜனதா மாநில ஓ.பி.சி., பிரிவு துணைத்தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து `லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10-ந்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பாபு முத்து மீரான், "இந்த மோசடி வழக்கில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், இதற்காக சில முக்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூசோ என்பவர் மூலம் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடியை பெற்றுள்ளார். இது போலீசாருக்கு தெரியவந்தவுடன் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்'' என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஐகோர்ட்டின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com