LPG Shortage| கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: நீலகிரியில் ஓட்டல்கள், கடைகள் மூடப்படும் அபாயம்

LPG Shortage| கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: நீலகிரியில் ஓட்டல்கள், கடைகள் மூடப்படும் அபாயம்
Published on
Summary

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா மையங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை பெரும்பாலும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களை நம்பியே உள்ளன.

இந்நிலையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வணிக கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், பல உணவகங்களில் சமையல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் ஒருசில இடங்களில் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளன. ஏராளமான ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளின் வகைகள் குறைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் டீக்கடைகள், சிற்றுண்டி விடுதிகள் மற்றும் பேக்கரிகளிலும் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக, அங்கு பணிகள் சீராக நடைபெறவில்லை.

இதனால் அந்த கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்படுவது தொடர்ந்தால், சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com