ஆம்பூர் அருகே லாரி-பைக் மோதல்: சிறுமிகள் பலி

தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆம்பூர் அருகே லாரி-பைக் மோதல்: சிறுமிகள் பலி
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி காவேரி. தம்பதியினரின் மகள்கள் கார்த்திகா ஸ்ரீ (வயது 9), பேரரசி (6), இளவரசி.

ஆங்கில புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பரந்தாமன் முடிவு செய்தார். அதன்படி பரந்தாமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றார்.

அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.

அப்போது பரந்தாமன் சென்ற பைக் லாரியில் மோதியது. அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது கார்த்திகா ஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த 2 சிறுமிகளின் பிணத்தையுய் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com