என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கர்நாடகாவில் லாரி வேலை நிறுத்தம்- உருளைக்கிழங்கு விலை உயர்வு
- ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன.
இந்த மண்டிகளுக்கு ஊட்டி, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படும்.
அவ்வாறு கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் உருளைக் கிழங்கு மண்டிக்கு கர்நாடகாவில் இருந்து வரும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துவிட்டது.
ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது. அதுவும் குறைந்த அளவிலேயே உருளைக்கிழங்கு வருவதால், மண்டிகளில் அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:-
ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும். தற்போது ஒரிரு லாரிகளில் மட்டுமே ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், ஆந்திர மாநிலம் வழியாக வருகின்றன.
அதிலும் குறைவான அளவிலேயே உருளைக்கிழங்குகள் வருகின்றன. 200-ல் இருந்து 250 டன் அளவிலான உருளை கிழங்குகளே வருகிறது.
கடந்த வாரம் கோலார் உருளைக் கிழங்கு 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.750-க்கு விற்பனையானது. நேற்று அதே 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்த பட்சம் ரூ.900-த்திற்கும், அதிகபட்சம் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.
இதே நிலை தொடர்ந்தால், உருளைக்கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






