கும்பக்கரை, சுருளி அருவியில் தொடரும் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கும்பக்கரை, சுருளி அருவியில் தொடரும் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com