கொசஸ்தலை ஆறு குப்பை கிடங்காக மாறுவதால் துர்நாற்றம் வீசுகிறது- சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
கொசஸ்தலை ஆறு குப்பை கிடங்காக மாறுவதால் துர்நாற்றம் வீசுகிறது- சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on

வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.

இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.

இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com