கோவையில் உறவினர் வீட்டிற்கு வந்த சென்னை சிறுவன் கடத்தல்? 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.
கோவையில் உறவினர் வீட்டிற்கு வந்த சென்னை சிறுவன் கடத்தல்? 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
Published on

கோவை:

சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.

நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு வேனை ஓட்டி சென்றது யார்? அவருடன் சிறுவன் ஏன் சென்றான் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு லோடு வேனில் சிறுவன் சென்றால் அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சிறுவனை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். அப்போது சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி மாநிலம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த சிறுவன் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com