கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 15 பேரின் காவல் நீட்டிப்பு

24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடைய இருந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 15 பேரின் காவல் நீட்டிப்பு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைதான சென்னையைசேர்ந்த கவுதம் சந்த், பன்ஷிலால், சிவக்குமார், கருணாபுரத்தைசேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சின்னத்துரை, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைய இருந்தது.

இதையடுத்து இவர்கள் 15 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுதம்சந்த் உள்பட 15 பேருக்கும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com