சத்தியமங்கலம் பகுதியில் 500 ஏக்கரில் சாகுபடி- மல்லிகை பூ விலை கடும் வீழ்ச்சி

சத்தியமங்கலத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மல்லிகை பூ அனுப்பி வைக்கப்படுகிறது.சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சத்தியமங்கலம் பகுதியில் 500 ஏக்கரில் சாகுபடி- மல்லிகை பூ விலை கடும் வீழ்ச்சி
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சிக்கரசம் பாளையம், வடவள்ளி, கெஞ்சனூர், தாண்டாம் பாளையம், தயிர் பள்ளம், பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் இருந்து பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வருகிறார்கள். தினமும் 3 டன்னுக்கு மேல் மல்லிகை பூக்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மல்லிகை பூ அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் மைசூர், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும் மல்லிகைப்பூ கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இருந்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும். வியாபாரிகள் அதிகளவில் வந்து மல்லிகைப்பூக்களை கொள்முதல் செய்வார்கள்.

கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால் ரூ.3 ஆயிரம் வரை மல்லிகை பூ விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் விசேஷ நாட்கள் வந்ததால் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் அதிகளவு விழாக்கள் தற்போது நடக்கவில்லை. மேலும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூக்களின் விலை கடும் சரிவடைந்து உள்ளது.

இதனால் சத்திய மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூக்களை விவசாயிகள் சிலர் அப்படியே செடியிலேயே விட்டு விடுகிறார்கள்.

தற்போது தினமும் 3 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் மல்லிகைப்பூக்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மல்லிகைப்பூ விலை கடும் வீழச்சி அடைந்துள்ளது.

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. இதனால் குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏராளமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

விலை வீழ்ச்சி காரணமாக தினமும் 3 டன் மல்லிகை பூக்களை சத்தியமங்கலம், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சலையினர் மல்லிகைப்பூ கிலோ ரூ.170-க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com