இலவச பயணம் கேட்டு அரசு பஸ் டிரைவர்-கண்டக்டரை தாக்கிய போதை வாலிபர்கள்

காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த டிரைவர், கண்டக்டரையும், கைதான ஆனந்தன், மகேந்திர பிரசாத்தையும் படத்தில் காணலாம்.
தாக்குதலில் காயமடைந்த டிரைவர், கண்டக்டரையும், கைதான ஆனந்தன், மகேந்திர பிரசாத்தையும் படத்தில் காணலாம்.
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு தடம் எண் 33 என்ற டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பிரபாகர் ஓட்டினார். கண்டக்டராக குமார் பணிபுரிந்தார். இந்தநிலையில் தேவனூர் புதூர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 3 பேர் பஸ்சில் ஏறினார்கள்.

குடிபோதையில் இருந்த அவர்கள் கண்டக்டரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கண்டக்டர் சின்னப்புதூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமிகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் புங்கமுத்தூர் பிரிவில் பஸ்சை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லைக்கொண்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு கீழத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஆனந்தன் (22) , கோவை மாவட்டம் கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் மகேந்திரபிரசாத் (19)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com