மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 65). கிராம உதவியாளராக பணிபுரிந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சரோஜா பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் வீட்டின் அருகே சற்று தொலைவில் மயானத்தில் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயானத்தில் தேடிய போது அங்கு ஒரு பகுதியில் ஒருவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை விஜயகுமார் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தனது மனைவியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் இந்த விபரீத முடிவை எடுக்கப் போகிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மயானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விஜயகுமார் என தெரிய வந்தது. மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கத்தில், உடல் நல்லடக்கம் செய்வதற்குள் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com