ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!

பல தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வான்மதி சிறந்த வழிகாட்டி.
Vanmathi IAS
Vanmathi
Published on

வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படித்து, இன்று தனது கடுமையான உழைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி வான்மதி ஐ.ஏ.எஸ்.

வறுமையைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் கைவிடும் பலருக்கு, இவரது இந்தச் சாதனைப் பயணம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

ஆடு மேய்த்துக் கொண்டே தொடர்ந்த பள்ளிப் படிப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதியின் தந்தை ஒரு சாதாரண ஓட்டுநர். அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, வான்மதிக்குச் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன.

தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கும் வான்மதி, மாலை பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடச் செல்ல மாட்டார். மாறாக, தனது குடும்பத்தின் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார்.

அந்தப் பகுதியிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டே, கையில் புத்தகத்தை வைத்துத் தனது பள்ளிப் படிப்பைத் தீவிரமாகப் படித்து முடித்தார்.

திருமணப் பேச்சுகளுக்கு நடுவே முதுகலை பட்டம்!

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வான்மதியின் குடும்பத்தினர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.

ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற வான்மதியின் ஆசையை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு உறுதுணையாக நின்றனர்.

இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று அசத்தினார்.

தோல்விகளைத் தாண்டிய UPSC சாதனை!

முதுகலை பட்டம் பெற்ற பிறகும் வான்மதியின் கனவு ஓயவில்லை. உயரிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.

பல மணிநேர உழைப்பு, ஆரம்பக்கட்ட தோல்விகள் எதற்கும் அவர் தொய்வடையவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், வான்மதி அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.

மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்!

தேர்ச்சி பெற்ற பின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.

சாதாரண கிராமத்தில் ஆடு மேய்த்த சிறுமி, இன்று நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் வான்மதியின் இந்த வெற்றிக் கதை, தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com