என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆசனூர் சாலையோரம் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்- வனத்துறையினர் எச்சரிக்கை
    X

    ஆசனூர் சாலையோரம் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்- வனத்துறையினர் எச்சரிக்கை

    • ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதே போல் சிறுத்தையும் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால் நடைகளை வேட்டையாடி வருகிறது. ஆனால் கரடி நடமாட்டம் ரொம்ப அரிதாகவே இருக்கும்.

    இந்நிலையில் ஆசனூர் சாலையோரம் திடீரென கரடி ஒன்று நீண்ட நேரம் சுற்றிக் கொண்டிருந்தது. கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் தங்களது வாகனத்தை நீண்ட தொலைவுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். சிறிது நேரம் ஆசனூர் சாலையை ஒட்டி அங்கும் இங்கும் சுற்றி திரிந்த கரடி பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.

    இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஈரோடு வனப்பகுதியை பொருத்தவரை கரடிகள் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். தற்போது ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும். அது எந்த நேரம் மனிதர்களை தாக்கும் என்று சொல்ல முடியாது. எனவே ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×