என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோடை சீசனை முன்னிட்டு 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா’ தொடங்குகிறது.
- வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகளை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.
ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்நிலையில் இந்தாண்டு கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் கோடை விழா நிகழ்ச்சிகள் வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் 'கோடை விழா' தொடங்குகிறது.
தொடர்ந்து கூடலூரில் 9,10,11-ந்தேதி ஆகிய 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 10,11,12-ந் தேதி ரோஜா கண்காட்சி ஆகியவை நடக்க உள்ளது.
மேலும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 127-வது மலர் கண்காட்சி வருகிற 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
குன்னூர் காட்டேரி பூங்காவில் இம்முறை முதல்முறையாக மே 30-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 5.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர அலங்கார மாடங்களை அலங்கரிப்பதற்காக சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இவை தற்போது பூக்க தொடங்கி உள்ளன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்ச்செடிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வசீகரிப்பதாக அமைந்து உள்ளது. இதனால் அவர்கள் பூஞ்செடிகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் நின்று செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.






