என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் ரத்தினத்தின் அலுவலகம்.
திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
- தொழில் அதிபர் ரத்தினம் தமிழகம் முழுவதும் மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ரத்தினம். இவருக்கு திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர தமிழகம் முழுவதும் மணல் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பலர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர். ஏற்கனவே தொழில் அதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள இடங்களில் 2 முறை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினத்தின் அலுவலகத்திற்கு 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த நபர்களிடம் ரத்தினம் எங்கே உள்ளார் என விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தின் கதவை பூட்டிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சியில் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிந்ததும் அவரது ஆதரவா ளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.






