சென்னையில் 25-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்: மழை குறைய வாய்ப்பு

நவம்பர் 28-ந்தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு.காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும்.
சென்னையில் 25-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்: மழை குறைய வாய்ப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் தீவிரம் அடையவில்லை.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் விட்டு விட்டு மழை கொட்டுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை கொட்டிய நிலையில் பின்னர் கனமழை இல்லை. பரவலாக லேசான மழையே பெய்கிறது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வருகிற 25-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.

சென்னையில் சராசரியாக நவம்பர் மாதத்தில் மழையின் அளவு 37 செ.மீ ட்டராக இருக்கும். ஆனால் தற்போது 57 செ.மீ.வரை பதிவாகி உள்ளது. இது 6 சதவீதம் அதிகம் ஆகும்.

நுங்கம்பாக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 28-ந்தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் வானிலை மாற்றங்கள் பொதுவாக தமிழகத்தின் வடக்கு பகுதி அல்லது ஆந்திராவின் தெற்கு பகுதியை நோக்கி நகரும்.

காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும். வருகிற 4-5 நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும்.

ஆனால் முற்றிலும் வறண்டு போகாது. தெற்கு பகுதியில் சில இடங்களில் லோசான மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 செல்சியஸ் முதல் 33 செல்சியஸ் வரையும் குறைந் தபட்சம் 25 செல்சியஸ் வரையும் இருக்கும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com