டிரைவர் மர்மச்சாவு: 6-வது நாளாக உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்

போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சங்கரன்கோவிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37) வேன் டிரைவர்.

இவருக்கு மீனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகன் கடந்த 8-ந் தேதி சிவராத்திரி அன்று அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறி முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். உயிர் இழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6-வது நாளாக அவரின் உடலை வாங்க மறுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com