கூடுதல் வரதட்சணை கேட்டு தாம்பத்ய உறவுக்கு மறுத்த வாலிபர்- இளம்பெண் புகாரால் வழக்கு

திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை. தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன்.
கூடுதல் வரதட்சணை கேட்டு தாம்பத்ய உறவுக்கு மறுத்த வாலிபர்- இளம்பெண் புகாரால் வழக்கு
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை லோகமானியா வீதி மேற்கு பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்.ஆராக வேலை செய்து வருகிறார்.

இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுசிக் கொமரலுஹர்சா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது எனது தந்தை ரூ.75 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரூ.10 லட்சம் வைர நகை, ரூ.10 லட்சத்தில் வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.10 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை. இதுகுறித்து கேட்டபோது ரூ.10 லட்சம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்றார். நான் அதையும் பெற்று கொடுத்தேன். சிறிது நாட்கள் கழித்து எனது கணவர் என்னை கொடுமைபடுத்த தொடங்கினார்.

அப்போது மேலும் ரூ.25 லட்சம் வரதட்சணை வேண்டும் என்றார். அதையும் நான் எனது பெற்றோரிடம் இருந்து வாங்கி கொடுத்தேன். இதை வைத்து எனது கணவர் தொழில் தொடங்கினார். ஆனால் அது நஷ்டம் அடைந்தது. பின்னர் மீண்டும் என்னிடம் பணம் கேட்டார். நான் தர மறுத்துவிட்டேன்.

தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன். நாட்கள் கடந்தும் எங்களுக்குள் எந்த தாம்பத்ய உறவு நடக்கவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்து வந்தேன்.

சம்பவத்தன்று நான் எனது பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு கேட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் என்னை கொடுமை படுத்தி துன்புறுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பெண்ணின் கணவர் கவுசிக் கொமரலு ஹர்சா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com