

சென்னை கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். 7 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் மருத்துவர் மீதான கத்திக்குத்து தாக்குதலை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலை 10 மணி வரை பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலியாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பொது சிகிச்சைக்காக புறநோயாளிகள் அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதில் தாமதம் ஏற்பட்டது.
புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.