மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: மகன் செய்தது சரி என்று கூறவில்லை - கைதான விக்னேஷின் தாய்

விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. காலை 10 மணிக்கு சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை.
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: மகன் செய்தது சரி என்று கூறவில்லை - கைதான விக்னேஷின் தாய்
Published on

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தாய் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்றேன். மருத்துவர் பாலாஜியை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிகிச்சை பெற்ரேன். யார் மருத்துவர் என கேட்டு மரியாதை குறைவாக பேசுவார். காலை 10 மணிக்கு சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை."

"தனியார் மருத்துவமனையில் என்னை காப்பாற்ற முடியாது என கூறிவிட்டனர். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று நான் குறை கூறவில்லை. 25 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர் என் உடலில் என்ன பிரச்சினை என்பதை ஏன் கண்டுபிடிக்கவில்லை. உரிய ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையா."

"தனியார் மருத்துவமனையில் வைத்து என்னை பார்த்துக் கொள்ள எனது மகன் மிகவும் சிரமம்பட்டான். நான் பிழைப்பது கஷ்டம் என கூறியதால் என் மகன் மன உளைச்சலில் இருந்தான். என்னை மிகவும் கஷ்டமான நிலையில் பார்த்ததால் இப்படி செய்தானா என்று தெரியவில்லை. என் மகன் நேரடியாக கத்தியால் குத்தினான், ஆனால் 25 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர் என் நுரையீரலை எடுத்துவிட்டார்."

"எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் மகன் தாங்க மாட்டான். என்னை இழந்ததை பற்றி நான் யோசிக்கவில்லை. நான் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அளித்த சிகிச்சைகளை மருத்துவர் முறையாக கவனிக்கவில்லை. எனது மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை. மருத்துவர் பாலாஜி மீது கடும் கோபம் உள்ளது. மருத்துவர் பாலாஜி என்னை ஆங்கிலத்தில் திட்டுவார்," என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com