வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல்

2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கவுன்சிலர்கள்  மோதல்
Published on

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாகர். இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவருக்கும் 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், சுதாகர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனது ஓட்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருகன் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு வந்து சுதாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும், இங்கும் தெறித்து ஓடினர்.

2 தரப்பினரும் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்ட சம்பவத்தால், அந்த இடம் பரபரப்பாக காட்சியளித்தது.

இந்த மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதேபோல காயமடைந்த முருகனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலுார் வடக்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com