சென்னை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் சொத்துவரி கணக்குகள் நீக்கம்- நிலைக்குழு தலைவர் க.தனசேகரன் குற்றச்சாட்டு

பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் சொத்துவரி கணக்குகள் நீக்கம்- நிலைக்குழு தலைவர் க.தனசேகரன் குற்றச்சாட்டு
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com