மதுரை மீனாட்சி அம்மன்-திருப்பரங்குன்றம் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்

கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன்-திருப்பரங்குன்றம் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்
Published on

மதுரை:

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com