

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.
சில பக்தர்கள், அங்க பிரதட்சணமாக கிரிவலம் செல்லும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடப்பதுண்டு.
இந்நிலையில், நேற்று தெலுங்கானாவை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிய படி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர். இது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய நடன கலைஞர்கள், கிரிவலப்பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டு கிரிவலம் சென்றனர்.
நாட்டிய கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
நடந்து கிரிவலம் செல்வதே கடும் சவாலாக அமையும் நிலையில், நாட்டியமாடியபடி 18 நடன கலைஞர்கள் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
உலக சாதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக நடன கலைஞர்கள் தெரிவித்தனர்.