கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து - ரெயில்வே துறைக்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம்

மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம். பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து - ரெயில்வே துறைக்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம்
Published on

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com