

நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.