ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் விழுந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்டு

கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதுசம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது.
ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் விழுந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்டு
Published on

திருச்சி:

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை பாஸ்கரன் ஓட்டிச் சென்றார். இதில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் பணியில் இருந்தார்.

இந்த பஸ் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் சற்று வேகமாக திரும்பியபோது, கண்டக்டரின் இருக்கை கழன்று முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த பஸ்சினை பராமரிக்கும் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர், பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மேலும் இன்று போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சாலையை பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இதில் பஸ்ஸில் சக்கரம் இறங்கும்போது பஸ் சரிகிறது. இந்த சாலையை சீர் செய்வது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com