நெல்லை மாநகராட்சியில் இரவு 10 மணி வரையிலும் செயல்படும் வரிவசூல் மையங்கள்- கமிஷனர் நூதன ஏற்பாடு

2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
நெல்லை மாநகராட்சியில் இரவு 10 மணி வரையிலும் செயல்படும் வரிவசூல் மையங்கள்- கமிஷனர் நூதன ஏற்பாடு
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.

பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com