என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- தரவரிசை பட்டியல் வெளியான அன்றே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வும் நடக்கிறது.
கோவை:
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 405 இடங்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 921 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
6 ஆயிரத்து 921 இடங்களுக்கு மொத்தம் 30 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையானது நேற்று தொடங்கியது.
அதன்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பணியானது வருகிற 21-ந்தேதி வரை நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
தரவரிசை பட்டியல் வெளியான அன்றே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வும் நடக்கிறது. இந்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. பின்னர் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 27-ந் தேதி நடக்க உள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






