என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் காபி விளைச்சல் அமோகம்- பராமரிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்
- நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது.
- காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும்.
சேலம்:
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இங்கு 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக அராபிகா வகை காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. காபி செடிகளில் காய்ப்பு பிடித்துள்ளது. அவ்வாறு காய்த்துள்ள செடிகளை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த காபி விவசாயிகள் கூறியதாவது:-
ஏற்காட்டில் சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை அறுவடை செய்யப்படும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்ப்பு பிடித்துள்ள காபி கொட்டைகளில் புழு, பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியும், அவ்வப்போது பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.






