ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை ஜூன் 26-ம் தேதி கைது செய்தது.
ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனுமதி அளித்துள்ளார். அத்துடன் 18-ந்தேதி உறவினர்களை சந்திக்கவும் அனுமதி அளித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மும்பை உள்ளிட்ட இடங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பதில் அளித்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதனால் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, மூன்று நாள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதித்தார். 19-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

டில்லி திஹார் சிறையில் இருந்து, சிறை மாற்ற வாரண்ட் மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை நீதிமன்ற காவலில் வைக்கவும், 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்க துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 29ம் தேதி வரை, ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தார். இந்த மனு மீதான விசாரணையின்போதுதான் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com