அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் நிறைவு- சென்னையில் போக்குவரத்து சீரானது

அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் கூட்டம் அதிகரித்தது.போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் நிறைவு- சென்னையில் போக்குவரத்து சீரானது
Published on

சென்னை:

சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர்.

பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஒரு சிலர் அவசரமாக போகவேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் அதிக பணம் கொடுத்து ஆட்டோக்களில் ஏறி சென்றனர்.

அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். இதுபோன்று போராட்டம் நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கிடையே போராட்டம் நடத்தும் ஊழியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் முன்வந்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு பணிமனைளில் இருந்தும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.

அடுத்தகட்டமாக வரும் 31ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com