

சென்னை விமான நிலையத்தில் இருந்து, சரக்கு விமானம் மூலம் மலேஷியா நாட்டிற்கு, வன விலங்குகள் கடத்தப்பட இருப்பதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக 13 பெட்டிகளில், கொண்டுவரப்பட்ட 230 கிலோ உயிருள்ள நண்டு பார்சல், வந்திருந்தது. அந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் இந்தியவகை நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது கண்டு அறியப்பட்டது. இதனையடுத்து அனைத்துப் பார்சல்களும் திறந்து பார்க்கப்பட்டதில் அதில் இருந்த மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அழிந்து வரும் ஆபூர்வ இனங்கள் பட்டியலில் இந்த ஆமைகள், இருப்பதால், அவற்றை ஏற்றுமதி வர்த்தகம் செய்ய தடைவிதிக்கப் பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் மறுவாழ்வுக்காக மாநில வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது