தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன
People
Published on

தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்கள்தொகை கணக்கெடுப்பு

தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்டு 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும்.

சுய கணக்கெடுப்பு

1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின் போது கணக்கெடுக்கப்படுவார்கள்.

வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com