வால்பாறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வால்பாறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
Published on

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com