நீதி தவறாமல் ஆட்சி நடக்கும் இடத்தில் செங்கோல் இருக்கும்- போகர் ஆதீனம் பேட்டி

பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும்.
டெல்லி சென்று திரும்பிய புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு பழனியில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
டெல்லி சென்று திரும்பிய புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு பழனியில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
Published on

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்த போகர் சித்தரின் சீடர் புலிப்பாணி சுவாமிகளின் பாரம்பரியத்தில் 13-வது போகர் ஆதீனமாக விளங்குபவர் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்.

இவர் கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து சோழர் காலத்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை ஆசீர்வாதம் செய்தார். இதையடுத்து பழனிக்கு திரும்பிய புலிப்பாணி ஆதீனத்துக்கு திருஆவினன்குடி கோவில் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் சன்னதி வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரத பிரதமருக்கு செங்கோல் வழங்கிய நிகழ்ச்சி மறக்க முடியாது. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கியபோது பிரதமர் மிக எளிமையாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது. எங்களை பிரதமர் அவரது வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்தார். பழனி மக்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பெருமை அனைத்தும் பழனி முருகனையே சேரும்.

பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும். பிரதமரை சந்தித்தபோது சித்தர் பீடங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com