திற்பரப்பில் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு

3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது.
திற்பரப்பில் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார், பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது. அணைக்கு 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 764 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாக உள்ளது. அணைக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையி லிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்1 அணை நீர்மட்டம் 14.73 அடியாக இருந்தது. அணைக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்2 நீர்மட்டம் 14.83அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.50 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com