மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வரத்து குறைந்தது

வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.
மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வரத்து குறைந்தது
Published on

ராயபுரம்:

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை

விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com