

சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவர் சேலம் செரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு நோட்டீசை ஒட்டினார்.
பின்னர் அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக எனது தொகுதி வளர்ச்சி டெண்டர் குறித்து கேட்பதற்காக செரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று வந்து செல்கிறேன்.
ஆனால் 3 நாட்களாக கண்காணிப்பாளர் செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லை.
இதனால் மனவேதனையுடன் இந்த நோட்டீசை அலுவலகத்தில் ஒட்டியுள்ளேன் என்றார்.
அவர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒட்டி உள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 நாட்களாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தும் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. போன் செய்தேன் போன் எடுக்கவில்லை.
எனவே அவர்கள் மீது துறை ரீதியாகவும் எனது சட்டமன்ற உறுப்பினர் அதிகார வரம்புக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறியுள்ளார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சதாசிவம் எம்.எல்.ஏ., அருள் எம்.எல்.ஏ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.