காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச்சென்ற ஓவியர்

ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.
காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச்சென்ற ஓவியர்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.

தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.

அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com