

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையின் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.