இரட்டை ரெயில் பாதை பணி காரணமாக அந்தியோதயா ரெயில் நெல்லையில் நிறுத்தம்- பயணிகள் வாக்குவாதம்

நேற்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரட்டை ரெயில் பாதை பணி காரணமாக அந்தியோதயா ரெயில் நெல்லையில் நிறுத்தம்- பயணிகள் வாக்குவாதம்
Published on

நெல்லை:

நாகர்கோவிலில் இருந்து தினந்தோறும் மதியம் 3.50 மணிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு தாம்பரம் செல்கிறது.

மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்கிறது. முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு இந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையம் வந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் அந்தியோதயா ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்படுவதாகவும், நாகர்கோவில் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பு அலுவலர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தாங்கள் நாகர்கோவில் வரை செல்ல டிக்கெட் எடுத்திருப்பதாகவும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களுக்கான டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது.

டிக்கெட் கவுண்டர் முன்பு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

X

Maalai Malar
www.maalaimalar.com