மதுரையில் பெட்ரோல் பங்க் அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்

செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக ஆம்னி காரில் வந்தார்.பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.
மதுரையில் பெட்ரோல் பங்க் அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்
Published on

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகன் செல்வராஜ், மீன் வியாபாரி. வியாபாரம் செய்வதற்காக செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்னி காரில் வந்தார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஆம்னி காருக்கு கியாஸ் நிரப்பியுள்ளார். ஆனால் காரை இயக்க முடியவில்லை. இதனால் காரில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு காரை தள்ளி சென்றார். பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.

இதனால் அதிர்ச்சிடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை முக்கிய சாலையில் திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் அருகிலேயே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளை என்பதால் அதிக போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com