திருடு போன அம்மனின் 10 சவரன் நகை- சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி

சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்மநபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.
திருடு போன நகையை சாமியாடி கண்டுபிடித்த பெண்
Published on

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

நகை திருட்டு

இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் அனைத்தையும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. கோவிலில் பல இடங்களில் தேடியும் செயினை கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மனை வழிபட வந்ததுபோல் நடித்த மர்மநபர் செயினை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் தங்க செயினை கண்டு பிடிக்க முடியவில்லை.

அருள்வாக்கு

இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தார்கள்.

அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்து சாமியாடினார். மேலும் அருள்வாக்கும் கூறினார்.

அவர் சாமியாடியபடி “எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது” என்று கூறியபடி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் அவர் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது அவரது கையில் திருடுபோனதாக கூறப்பட்ட அம்மன் நகை இருந்தது. “என் நகை திருடு போல... இங்க தான் இருக்கு...” என்று சொல்லிய படி பக்தர்களிடம் காண்பித்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் பரவசம்

அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்மநபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

மேலும் சிலர் சாமியாடிய பெண் மாயமான நகையை எப்படி கண்டுபிடித்தார்? என்ற பதில் தெரியாமலும் கேள்விகள் எழுப்பினர். எது எப்படியோ? கோவிலில் திருடுபோன நகை கிடைத்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

பின்னர் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருடு போன அம்மன் நகையை சாமியாடிய பெண் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com