11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை

ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை
Published on

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம்

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

மணிமண்டபம்

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது.

அப்துல் கலாம் நினைவிடம்

அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி

மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாமலை

இதையடுத்து வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல் கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com